மரம் வெட்டும் ஒருவன், மரம் வெட்ட வெட்ட ஆதாமைத் திட்டிக்கொண்டேயிருந்தான்.
ஆதாமினால்தான் உலகத்துக்கு பாவமும் சாபமும் வந்தது. நான் நெற்றி வியர்வை நிலத்திலே சிந்த மரம் வெட்ட வேண்டியதிருக்கிறது.
ஆதாமின் கீழ்ப்படியாமையால், நானும் சாபத்திற்குள்ளாகி, இவ்வளவு கஷ்டப்பட்ட வேண்டியதிருக்கிறது என்று சொன்னான்.
இவன் ஆதாமை ஒவ்வொரு நாளும் வசைபாடுவதை, அந்த வழியாய்க் கடந்து செல்லும் போதகர் ஒருவர் கேட்டுக் கொண்டே வந்தார்.
ஒருநாள் அவர் ஒரு சிறு பொட்டலத்தை அந்த மரம் வெட்டியிடம் கொடுத்து, "இதை வைத்திரு திறக்காதே, பத்திரமாய்ப் பார்த்துக் கொண்டால், உனக்கு நூறு ரூபாய் தருகிறேன்" என்று சொல்லி வைத்துச் சென்றார்.
நூறு ரூபாய் தனக்குக் கிடைக்கப்போகும் பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தான். அந்த மரம் வெட்டி அப்படியானால் இந்த பொட்டலத்தில் ஏதோ மிகவும் விலையேறப்பெற்ற ஒன்று இருக்க வேண்டும் என்று எண்ணினான். அவன் ஆவலை அடக்க முடியவில்லை.
கடைசியில் பொட்டலத்தை மெதுவாய்த் திறந்தான். அவ்வளவுதான். உள்ளே இருந்து ஒரு சுண்டெலி குதித்த விழுந்து ஓடியது. வேறு ஒன்றும் உள்ளே இல்லை. மாலையில் போதகர் வந்தார்.
"ஆதாம் கீழ்ப்படியாதது இருக்கட்டும், நீ எப்படி? நூறு ரூபாய் பரிசை இழந்தாயே" என்றார். அன்று முதல் ஆதாமை மட்டுமல்ல, மற்றவர்களைக் குறை கூறுவதையும் விட்டுவிட்டான்.
மற்றவர்களின் குறைகளைப் பற்றி பேசாமல், கிறிஸ்துவின் இரக்கத்தைப் பற்றியே பேசுங்கள் அப்பொழுது நீங்கள் நீதிமான்களாவீர்கள். அநேகரை நீதிக்குட்படுத்துவீர்கள்.
"அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்" (ரோமர் 5:19)