ஒருவர் கூகுளில் படித்தே இது என்ன நோய், இதற்கு என்ன மருந்து என கண்டுபிடித்து விடுவார். ஆனால் அவருக்கும் ஒரு முறை உடல் நலம் சரி இல்லாமல் போனது, கூகுளில் காட்டப்பட்ட மருந்துகள் அவருக்கு வேலை செய்யவில்லை.
உடனடியாக மருத்துவரை நோக்கி ஓடினார். அங்கே மருத்துவர் அவருக்கு மருத்துவ பரிந்துரைகளை சொல்ல தொடங்கும் போதே...
டாக்டர்..எனக்கு இது தான் வியாதி, இது தான் மருந்து, அத மட்டும் கொடுங்க....என தான் கூகுளில் படித்த எல்லாவற்றை சொன்னார்.
ஆனால் மருத்துவர் வேறு மருந்துகளை கொடுக்கவே அந்த நோயாளி கோபமாகி ...எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைச்சிட்டீங்களா ? நான் ஏற்கனவே கூகுளில் படித்து விட்டு தான் வந்தேன் என்றார்.
அதற்கு மருத்துவர்...Don't confuse your google search with my medical degree என்றார்.
அதாவது நாங்க டாக்டர் பட்டம் படிச்சி தேர்ச்சி பெற்று இருக்கோம், நாங்க சொல்லுறத கூகுள் சொல்லுற காரியங்களோட குழப்பிக்க வேண்டாம்...என்றார்
மேலும் கூகுள் சொல்லும் மருந்துகளில் பக்கவிளைவு அதிகம், அது உங்கள் உடம்புக்கு ஏற்றதா என கூகுளுக்கு தெரியாது. உங்களுக்கு எதை கொடுத்தால் சரியாக இருக்குமோ அதையோ உங்களுக்கு சொன்னேன் என்றார்
நாமும் கூட பாவம் என்ற நோயின் பிடியில் இருந்து வெளியே வர பல கட்டுரைகளை எழுதுகிறோம். இதை செய் / அதை செய்யாதே என கட்டளைகளையும் நம்மூடைய யூகங்களையும் தயாரிக்கிறோம்.
ஆனால் இதெல்லாம் உண்மையான மருத்துவரான இயேசு கிறிஸ்துவிடம் போய் சொன்னால் எப்படி இருக்கும் ?
அவர் தன்னை ஏற்றுக்கொள்ளாத யூதரை பார்த்து...வைத்தியனே உன்னை தானே குணமாக்கி கொள்...என்றார். நமக்கும் அப்படியே சொல்லுவார் அல்லவா ?
பிதாவாகிய தேவனால் முத்தரிக்கப்பட்ட, அபிஷேகம் செய்யப்பட்ட அவரே நம் பாவத்துக்கு பரிகாரியாக (மருத்துவராக) இருக்கிறார்.
மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளில் இருந்து விடுதலையாகி நீதிமான்கள் ஆக்கப்பட கூடாமல் இருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளில் இருந்து இவராலே விடுதலையாகி நீதிமானாக ஆக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது. (அப் 13:39)
நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் (யாத் 15:26)