வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே , மூலைக்குத் தலைக்கல்லாயிற்று . அது கர்த்தராலே ஆயிற்று , அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது . - ( சங்கீதம் 118 : 22-23 ) .
பல வருடங்களாக அந்த மரம் அக்காட்டிலே இருந்தது . மிகுந்த ருசியுள்ள நல்ல கனிகளைக் கொடுத்து , பறவைகள் , விலங்குகள் , வழிப்போக்கர்கள் என அனைவரும் பசியாற பழங்களைக் கொடுத்தது , ஆனால் ஒருநாள் வீசிய பலத்த காற்றில் வேரோடு சாய்ந்தது அந்த மரம் .
அவ்வழியே சென்ற ஒருவரும் அதை தூக்கி நிறுத்த முன்வரவில்லை . பரிதாபத்தோடு அதைப் பார்த்துவிட்டு சென்று விட்டனர் . அந்த மரமோ , ' நான் எவ்வளவோ கனிகளைக் கொடுத்து மற்றவர்களுக்கு உதவியாகத்தானே இருந்தேன் . எனக்கு இப்படி ஒரு நிலை வந்துவிட்டதே ' என மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டது .
நாட்கள் உருண்டோடி வருடங்களாயின . மரம் மண்ணுக்குள் புதைந்து போனது . பூமியின் உஷ்ணம் மற்றும் அழுத்தத்தினால் அது நிலக்கரியாக மாறியது . ஒருநாள் ஆட்கள் வந்து தோண்டினபோது நிலக்கரி இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள் . மேலும் தோண்டினபோது மிகவும் கடினமான கல்போன்ற ஒரு பகுதியை கண்டு அதை வெட்டி எடுத்து சோதித்தபோது அது விலையுயர்ந்த வைரம் என்று கண்டுபிடித்தனர் . இறுதியில் சரியான அளவில் வெட்டப்பட்டு , ஜொலிக்கிற வைரமாக மாறினது .
பிரியமானவர்களே , நீங்களும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு , அவருக்காக வாழ்ந்து மிகுந்த கனிகளை கொடுத்து வருகிறவர்களாக இருக்கலாம் . ஆனால் அதினிமித்தம் உங்கள் குடும்பத்தினர் , உற்றார் , உறவினர்கள் உங்களை வெறுத்து , ஒதுக்கிதத்ள்ளி தனிமைப்படுத்தலாம் . இருப்பினும் எல்லா கஷ்டங்களையும் அவதூறான வார்த்தைகளையும் பொறுமையாய் சகித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் கண்ணீரோடு மறைந்திருந்த ஜெபிக்கிற ஜெபங்கள் உங்களை விலையுயர்ந்ததாக்கி , உங்கள் குடும்பத்தாரையும் இரட்சிக்கும் . ஒருநாளில் கர்த்தர் உங்களுக்கு ஜீவக்கிரீடத்தை தருவார் . சோர்ந்து போகாதிருங்கள் . நீங்கள் விசேஷித்தவர்கள் !
வேதத்தில் யோசேப்பினுடைய வாழ்க்கையும் இப்படித்தான் இருந்தது . ஆகாது என்று தள்ளிவிடப்பட்டப்ட்டவராக , பாழும் கிணற்றில் தள்ளப்பட்டு , கிடந்தார் . துன்பங்களையும் துயரங்களையும் பொறுமையாய் சகித்தார் . முடிவு ஜொலிக்கிற வைரத்தைப் போல விலையேறப்பெற்றவனானார் . அவருடைய வாழ்க்கை பல ஆண்டுகள் கடந்தும் நம்மோடு பேசுகிறது .
' நான் மற்றவர்களுக்கு எத்தனையோ நன்மைகள் செய்கிறேன் , ஆனால் என் வாழ்வில் எனக்கு உதவுவார் யாரும் இல்லை , என்னை தூற்றுகிறவர்கள்தான் ' என்று சொல்கிறீர்களா ? சோர்ந்து போகாதிருங்கள் . நீங்கள் விசேஷித்தவர்கள் . கர்த்தர் மற்றவர்கள் உங்களை தூற்றிக் கொண்டே இருக்க அனுமதிக்க மாட்டார் . ஒருநாள் வரும் , உங்களை தூற்றினவர்களே உங்களிடம் வரும்படி கர்த்தர் உங்களை தலையை உயர்த்துவார் . தற்போது நடப்பவை எல்லாம் ஒரு நாள் திரும்பிப்பார்த்து , கர்த்தர் உங்களை மேன்மையாக வைத்ததை நினைத்து அவரை துதிப்பீர்கள் .
ஆம் , கர்த்தருக்குள் வாழுகிற நாம் விசேஷித்தவர்கள் . அவர் நமக்குள் இருப்பதால் அவருடைய குணாதிசயங்கள் நம்முடைய வாழ்வில் தானாக வெளிப்படும் . பிரச்சனைகள் மாறினப்பின் பொன்னாக , வைரமாக நாம் ஜொலிப்பதை மற்றவர்கள் காண்பார்கள் . ஏனெனில் நம் தலையை உயர்த்துபவர் நம் தேவனே ! ஆகையால் நாம் விசேஷித்தவர்களே ! ஆமென் அல்லேலூயா !