ஒருமுறை மார்ட்டின் லுத்தர் வாழ்க்கையில் பெரிய மனச்சோர்வு ஏற்பட்டது. அவர் மிகவும் கலங்கி, கவலைப்பட்டு சோர்ந்துபோய். மூலையில் அமர்ந்துவிட்டார்.
அவருக்கு சாப்பிடப் பிரியமில்லை. இதைக் கண்ட அவருடைய மனைவி, மார்ட்டின் லுத்தருக்கு அருமையான பாடத்தைக் கற்றுக்கொடுக்க விரும்பி, ஒரு கறுப்பு கவுண் ஒன்றைப் போட்டுக் கொண்டு, அவர் முன்வந்து நின்றார்கள்.
மேல் நாடுகளில் ஒருவர் கறுப்பு கவுண் அணிந்தால், நெருங்கின உறவினர்கள் யாரோ மரித்துவிட்டார்கள் என்று அர்த்தம்.
எனவே மனைவியை அந்த உடையில் கண்ட லுத்தர் திகைத்துப் போய்விட்டார். நடுக்கத்தோடு, "யாரம்மா இறந்தது?" என்று பயத்தோடு கேட்டார்.
அதற்கு அவர் மனைவி, "ஐயா இயேசு மரித்துப்போய்விட்டார்; நீங்கள் இவ்வளவு கவலையோடு முகத்தை வைத்துக்கொண்டிருந்ததால் உங்கள் மீட்பர் மரித்துப்போயிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன் என்றார்."
"என் மீட்பர் உயிரோடிருக்கிறார்" என்னும் வேத வசனத்தை புத்திசாலித்தனமாக தனக்கு நினைப்பூட்டிய மனைவிக்கு, நன்றி செலுத்திய லுத்தர், புதுப்பெலத்தோடு, கர்த்தரைத் துதித்து விட்டு, உற்சாகமாக ஊழியத்திற்குச் சென்றார்.
நண்பர்களே, உங்கள் மனச்சோர்வின் நேரங்களில், உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களோடு ஜீவனுள்ளவராய் இருக்கிறார் என்பதை விசுவாசித்து, உங்கள் மனக்கண் முன்நிறுத்தி, உற்சாகமாய் ஸ்தோத்திரம் செய்யுங்கள். உங்கள் சோர்புகள், தேவ வல்லமையாக மாற்றப்படும். அங்கு ஒரு மாபெரும் ஜெயம் ஆரம்பிக்கும். ஆமென்
"நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையும் குறித்து. உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்" (பிலிப்பியர் 4:6)